கோலாலம்பூர்:
விநோத நோயின் காரணமாக கடந்த 9 ஆண்டுகாலமாக வாத்தைப்போல நடந்து கொண்டிருக்கிறார் கிளந்தான், தும்பாட்டில் கம்போங் கேரோங் பகுதியைச் சேர்ந்த ஹயாத்தி இப்ராகிம்.
தற்போது 48 வயதாகும் ஹயாத்தி முதலில் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருந்தார். ஆனால் 9 வருடங்களுக்கு முன்னர் அவர் நடப்பதற்கு மிகவும் அவஸ்தைப் பட்டார். ஒரு கட்டத்தில் மற்றவர்களைப் போல நேராக நடக்க முடியாமற்போகவே, அவர் நடை வாத்து நடையாகிப் போனது. அது திடுதிப்பென்று நேர்ந்துவிட்ட ஒரு சுழல்.
அவரால் நேராக நிற்கக் கூட முடியாது. எந்த வேலையாக இருந்தாலும் கீழே அமர்ந்தவாறுதான் அவரால் இயங்க முடியும். ஹயாத்தியின் இரண்டு பிள்ளைகளுக்கும் கூட இதே நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 7 பிள்ளைகள் இவருக்கு. ஆனால் குடும்பச் சுழல் காரணமாக அதில் நால்வரை மற்றவர்களிடம் வளர கொடுத்துவிட்டாராம்.
ஹயாத்திக்கும் அவரது ஒரு பிள்ளைக்கும் மாதம் தலா 300 ரிங்கிட் சமூகநல உதவி வழங்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் செலவுகள் சமாளிக்க முடியாது போகும்போது அவர் கோத்தாபாரு நகருக்குச் சென்று யாசகம் பெற்று காலம் தள்ளுகிறார்.








