முஹிடின் மீதான வழக்கு: பெர்சத்து கட்சி கணக்கிற்கு வந்த RM19.5 மில்லியன் ரிங்கிட் பரிமாற்றம்: ‘அசாதாரணமானது’ என வங்கி அதிகாரி சாட்சியம்!

கோலாலம்பூர்:

பெர்சத்து (Bersatu) கட்சியின் வங்கிக் கணக்கிற்கு ஒரு கட்டுமான நிறுவனத்திடமிருந்து RM19.5 மில்லியன் வந்திருப்பது “சாதாரணமானது அல்ல” என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான ஜனா விபாவா (Jana Wibawa) திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அவர் மீது நான்கு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளும், மூன்று பணமோசடிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சாட்சியமளித்த பேங்க் முஅமலாட் (Bank Muamalat) ஷா ஆலம் கிளை உதவி மேலாளர் நோராசியந்தி மிஸ்வான் கூறியதாவது: ‘மாம்போர்’ (Mamfor Sdn Bhd) எனும் நிறுவனத்தின் கணக்கிலிருந்து 2021 மே 12 முதல் 2022 நவம்பர் 16 வரை RM19.5 மில்லியன் பெர்சத்து கட்சியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக ஒரே நிறுவனத்திடமிருந்து இவ்வளவு பெரிய தொகை வந்ததால், வங்கி இது குறித்து ‘சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை அறிக்கை’ (STR) ஒன்றை வெளியிட்டுள்ளது.

2021 முதல் 2022 இறுதி வரை RM500,000 முதல் RM2 மில்லியன் வரையிலான காசோலை பரிவர்த்தனைகள் அடிக்கடி நடந்துள்ளன.

“எனது அனுபவத்தில், ஒரு நிறுவனம் தனது வணிகத் தன்மைக்கு மாறாக, அரசியல் கட்சிக்கு இவ்வளவு பெரிய தொகையைத் தொடர்ந்து வழங்குவதை நான் பார்த்ததில்லை. குறிப்பாக UMNO, DAP அல்லது PAS போன்ற பிற கட்சிகளுக்கு இந்த நிறுவனம் நிதி வழங்கவில்லை” என்று அவர் சொன்னார்.

வங்கிக் கிளை வழங்கிய நோட்டீஸைத் தொடர்ந்து, கடந்த 2025 பிப்ரவரி 26 அன்று ‘மாம்போர்’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மூடப்பட்டதாகவும் சாட்சியத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி நூர் ருவேனா முகமட் நுர்தின் முன்னிலையில் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here