பாகிஸ்தானுக்கு சிறப்பு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் உயரிய விருதான நிஷான் – இ – பாகிஸ்தான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது,
மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றடைந்திருக்கும் அன்வாருக்கு அந்நாட்டு அதிபர் அசிஃப் அலி ஸர்தாரி அதிபர் மாளிகையில் இன்று அந்த விருதை வழங்கி சிறப்பு செய்தார்.
மலேசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் அன்வாரின் திறமைமிகு தலைமைத்துவத்தை பாராட்டும் வண்ணம் அந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக பாகிஸ்தானுக்கான மலேசிய ஹை கமிஷனர் டத்தோ முகமட் அஸார் மஸ்லான் தெரிவித்தார்.
அந்த விருது வழங்கும் விழாவில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் , வர்த்தக,முதலீட்டு தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் உட்பட மலேசியப் பேராளர்கள் பங்கேற்றனர்.





















