இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்திற்கு, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட், 2ஆவது நாள் ஆட்டத்தின் போது, கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. 37ஆவது ஓவரின்போது, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை, பேட்டர் அடிக்காமல் விட்டபோது, அதனை ரிஷப் பந்த் சரியாக பிடிக்கவில்லை. இதனால், பந்து நேராக ரிஷப் பந்தின் கால் முட்டியில் பட்டது. உடனே, ரிஷப் பந்த் வலியால் துடித்தார்.
அதன்பிறகு ரிஷப் பந்தால் நடக்கவே முடியவில்லை. மருத்துவர்கள் வந்து, தாங்கிப்பிடித்துக் கொண்டே ரிஷப் பந்தை அழைத்துச் சென்றனர். ரிஷப் பந்தால், சுயமாக நடக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது, ரிஷப் பந்த் பிட்சிற்குள் வந்து, பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டார். ஆனால், அவரால் கால்களை சரியாக தகர்த்த முடியவில்லை. தயங்கி தயங்கிதான் எட்டு வைத்தார். இதனால், ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது சந்தேகம் தான்.
துரூவ் ஜோரல் பேட்டிங் செய்ய முடியுமா?
ரிஷப் பந்திற்கு மாற்றாக துரூவ் ஜோரல்தான் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதனால், ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால், துரூவ் ஜோரலால் பேட்டிங் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஐசிசி விதிமுறைப்படி விக்கெட் கீப்பர் அல்லது ஒரு வீரருக்கு சப்ஸ்டிடியூட் வீரராக களமிறங்குபவர் கேப்டன்ஸியோ அல்லது பேட்டிங்கோ அல்லது பௌலிங்கோ செய்ய முடியாது. பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி உண்டு.









