அர்ஜென்டினா: அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9 பேர் மாயம்

பியூனோஸ் அயர்ஸ்,அர்ஜென்டினா நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் பகுதியில் இருந்து 370 கி.மீ. தொலைவில் வில்லா கெஸ்செல் என்ற இடத்தில் துப்ரோவ்னிக் ஓட்டல் ஒன்று இருந்தது. 10 அடுக்குமாடிகளை கொண்ட இந்த ஓட்டல் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில், பக்கத்தில் உள்ள கட்டிடங்களும் பாதிப்படைந்தன. இதில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானார். அவருடைய மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். எனினும், இந்த சம்பவத்தின்போது, அவர்களின் மகன் உடன் இருந்தது பற்றிய தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை என பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தின் பாதுகாப்பு மந்திரி ஜேவியர் அலோன்சோ கூறியுள்ளார்.

இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அவசரகால குழுவினர் ஓட்டலின் இடிபாடுகளில் யாரேனும் இருக்கிறார்களா? என தேடும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் இடிந்து விழுந்த சம்பவத்தில், 9 பேரை காணவில்லை. அவர்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களும் அடங்குவர்.

அர்ஜென்டினாவின் பாதுகாப்பு மந்திரி பேட்ரிசியா புல்ரிச் வெளியிட்ட செய்தியில், பொறியியலாளர்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் குழு உள்ளிட்ட மத்திய போலீசின் சிறப்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர, தளவாடங்கள் மற்றும் செயல்பாட்டு ஆதரவுக்கான மற்றொரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here