பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கு, டேட்டிங் செல்போன் செயலி மூலமாக நிகால் உசேன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை கொடுத்துள்ளனர். மேலும் செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால், இளம்பெண்ணுக்கும், நிகால் உசேனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
அத்துடன் இளம்பெண்ணை திருமணம் செய்வதாகவும், நிகால் உசேன் கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், அவருடன் ஓட்டலுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஓட்டலில் வைத்து இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நிகால் உசேன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது இளம்பெண்ணை திருமணம் செய்ய அவர் மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மடிவாளா போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அதில், எனக்கும், நிகால் உசேனுக்கும் கடந்த மார்ச் மாதம் டேட்டிங் செல்போன் செயலி மூலமாக பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்வதாக கூறி ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை கற்பழித்ததால், நான் கர்ப்பம் அடைந்தேன். அதையடுத்து எனது கர்ப்பத்தை கலைத்து விட்டு தற்போது திருமணம் செய்ய நிகால் உசேன் மறுப்பதாக கூறியுள்ளார்.
அந்த புகாரின் பேரில் மடிவாளா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட நிகால் உசேனை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








