எந்த ஒரு நெருக்கடியான சூழலாக இருந்தாலும், அமைதியாக அமர்ந்து சிவனை மனதில் நினைத்து இந்த சிவபுராணத்தை ஒரே ஒரு முறை படித்தால் அதை படித்து முடிப்பதற்குள் நம்மை சூழ்ந்த சிக்கல், துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி பிறந்து விடும். இது பலரும் தங்களின் அனுபவமாக உணர்ந்த உண்மையாகும்.
பன்னிரு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாக அமைந்துள்ளது திருவாசகம். மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டதாகும். “திருவாசத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பார்கள். கடவுள் சொல்ல மனிதன் கேட்டது, பகவத் கீதை. ஆனால் மனிதன் சொல்ல இறைவன் கேட்டது, திருவாசகம். மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல சிவ பெருமானே தன்னுடைய திருக்கரங்களால் எழுதிய வாசகம் என்பதால் இதற்கு திருவாசகம் என்ற பெயர் ஏற்பட்டது. சிவ பெருமானே எழுதியது என்பதால் இந்த நூலுக்கு எப்போதும் அழிவு கிடையாது. திருமுறைகளில் எட்டாவதாக இடம்பெற்றதால் திருவாசகத்திற்கு சிறப்பு அதிகம். மந்திரங்களில் எட்டாவது மந்திரத்தை “சிகாமந்திரம்” என்பார்கள். அதாவது, சிகை (தலை) மேல் எப்படி உறுப்பு எதுவும் இல்லையோ அதே போல் இந்த மந்திரத்திற்கு மேலாக மந்திரம் கிடையாது என்பது இதற்கு பொருள். அந்த வகையில் எட்டாவது திருமுறையாக போற்றப்படும் திருவாசத்திற்கும் மேலான ஒரு வாசகம் கிடையாது என்பார்கள்.
“நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே”
நாயை விட கீழான என்னையும் ஒரு பொருட்டாக நினைத்து, தானாக வந்து அருள் செய்து, கருணை காட்டும் தாயை விட மேலானவே என்ற இந்த வரிகளை சிவனை நினைத்து, பொருள் உணர்ந்து சொல்லும் போது மனம் உருகி சொல்பவர்களுக்கு நிச்சயம் கண்களில் கண்ணீர் பெருகும். சிவபுராணத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து படிக்கும் போது சிவனின் அருட் கருணையையும், அந்த கருணையை பெற்ற நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதை உணர்ந்து மெய்சிலிர்க்கும்.
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்”
என்ற வரிகளிலேயே சிவபுராணத்தை படிப்பதற்குகூட சிவனின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். சிவனின் அருள் ஏற்கனவே நமக்கு கிடைத்து விட்டதால் இப்போது இதை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.சிவனின் பெருமைகளையும், கருணையை மட்டுமல்ல சிவபுராணத்தை பொருள் உணர்ந்து படிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை மாணிக்கவாசகர் குறிப்பிட்டிருப்பார்.
சிவபுராணத்தை படிக்கும் போது வெறும் வாயால் படிக்கக் கூடாது. நம்முடைய மனம், உடல், உயிர், நாடி நரம்பு, ஆத்மா என அனைத்தும் படிக்க வேண்டும் என்பார்கள். சிவ புராணத்தை படிக்க முடியாவிட்டாலும், காதுகளால் கேட்பதும் புண்ணிய பலனை தரும். ஆனால் 95 வரிகள் கொண்ட சிவ புராணத்தை எப்படி படித்தால் சிவனின் அருளும், சிவ புராணம் படித்த முழு பலனும் கிடைக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறைப்படி, ஒரே ஒரு முறை சிவ புராணத்தை பொருள் உணர்ந்து, சிவ சிந்தனையுடன் மனதார படித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
சிவபுராணம் படிக்கும் சரியான முறை
* சிவ புராணத்தை படிப்பதற்கு நேரம், காலம் எதுவும் கிடையாது.
* தினமுமோ அல்லது சிவனுக்குரிய திங்கட்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பெளர்ணமி போன்ற நாட்களிலோ படிப்பது மிக மிக உன்னத பலனை தரும். * சிவபுராணம் படிக்க துவங்குவதற்கு முன்பும், படித்து முடித்த பிறகும் திருச்சிற்றம்பலம் என மூன்று முறை சொல்ல வேண்டும்.
* பிறகு, “தென்னாடுடைய சிவனே போற்றி…எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என சொல்லி விட்டு,
“தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே-எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்”என்ற வரிகளை சொல்லிய பிறகு, நமச்சிவாய வாழ்க என துவங்கும் சிவபுராணத்தை படிக்க துவங்க வேண்டும்.
* ஆரம்பம் முதல் முடியும் வரை ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி, நிதானமாக, சரியாக உச்சரிக்க வேண்டும்.
* வாய் குளறி தவறாக உச்சரித்தாலும் அதில் தவறு கிடையாது. ஆனால் மனதில் சிவனின் எண்ணம் இருந்தால் அப்படி தவறாக நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் கூட சிவனிடம் நம்மை நெருங்கச் செய்யும்.




















