பிளாஷ்பேக் ; சொந்த டிரைவரையே வில்லனாக்கிய நடிகர் யஷ்

கன்னட திரையுலகம் என்கிற அளவிலேயே ஒரு குறுகிய வட்டத்தில் வலம் வந்த நடிகர் யஷ், ‘கேஜிஎப்’ திரைப்படத்தின் வெற்றி மூலம் ஒரு பான் இந்தியா நடிகர் என்கிற அளவிற்கு வளர்ச்சி பெற்றார். அதன் காரணமாகவே கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது. கேஜிஎப் திரைப்படம் ஒரு ஹீரோவாக யஷ்ஷுக்கு மட்டுமல்ல, அதில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கும் கூட நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது. அந்த வகையில் கேஜிஎப் திரைப்படத்தில் வில்லனாக கருடா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ராமச்சந்திர ராஜு, கருடா ராம் என அழைக்கபடும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்றார்.

இத்தனைக்கும் அவர் இயல்பிலேயே ஒரு நடிகர் அல்ல.. ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வந்த அவர், ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டு நடிகர் யஷ்ஷுக்கு பாடிகார்ட் மற்றும் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் யஷ்ஷுடனேயே இணைந்து பயணித்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் தான் இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎப் படத்தின் கதையை கூற வந்தபோது ராமச்சந்திர ராஜுவின் தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டதுடன் அவருக்குள் இருக்கும் நடிப்பு ஆர்வத்தையும் தெரிந்து கொண்டார். யஷ்ஷும் ராஜுவின் நடிப்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட, அதன் பிறகு பிரசாந்த் நீல் நடத்திய ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்டு கேஜிஎப் படத்தில் அந்த கருடா ராமாக நடிப்பில் மிரட்டியிருந்தார் ராமச்சந்திர ராஜு. அந்த படத்தின் மூலம் அவருக்கு தமிழிலும் பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here