கோலாலம்பூர்:
மலேசியாவில் முன்பெல்லாம் அதிகம் காணப்பட்ட சில மீன் வகைகள் அண்மைக் காலமாகக் குறைந்து வருகின்றன.
குறிப்பாக அருகிவரும் மீன் வகைகளில் ஒரு காலத்தில் அதிகம் காணப்பட்ட இக்கான் கெம்புங் (மேக்கரல்) மீனும் அடங்கும்.
பருவநிலை மாற்றம், கடல் வாழ் உயிரினங்களை அதிகம் பாதித்து வருவதாக மலேசிய மீன் துறை பொதுச் சங்கத்தின் தலைவர் சியா தியென் ஹீ ஹீ கூறினார்.
“ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்கான் கெம்புங் கடலில் அதிகம் காணப்படவில்லை. அது முற்றிலும் அழிந்துபோனதாகக்கூட சிலர் கருதினர். ஆனால், 2022ஆம் ஆண்டில் அந்த மீன் திடீரென மீண்டும் காணப்பட்டது. எனினும், சிறிதான உருவத்தில், உடல் எடை குறைந்து காணப்பட்டது,” என்று சியா குறிப்பிட்டார்.
அண்மைய ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதை அவர் சுட்டினார். அதனால் மீன்கள் உட்கொள்ளும் முக்கிய உணவு வகையான பிளாங்க்டனின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கடல் வளங்கள் குறைவதற்கு மனித நடவடிக்கைகளும் காரணம் என்று அவர் சொன்னார். மீன்பிடிப் பிரிவு இப்பிரச்சினைகளைக் கவனிக்கும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
“நமது பரிந்துரைகள் கருத்தில்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் மீன்பிடிப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்,” என்றும் சியா குறிப்பிட்டார்.
மீனவர்களுக்கு அதிக மீன்கள் கிடைக்காமல் இருப்பது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக கோலாலம்பூர் ஹோய் சியோங் மீன் ஒட்டுமொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சிங் கியென் ஹோக் தெரிவித்தார். இருந்தாலும், வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருப்பதால் உள்ளூரில் கடல் உயிரினங்களை உண்பதில் ஆர்வம் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
அதனால் அளவுக்கதிகமான மீன்கள் விற்கப்படும் விநோதமான சூழல் உருவாகியிருப்பதை அவர் சுட்டினார்.