பெர்சியாரான் கர்ப்பால் சிங்கில் உள்ள ஒரு கஃபே முன்பாக ஒரு வழக்கறிஞர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகப்பேர்வழி உட்பட 22 ஆடவர்களை போலீஸ் கைது செய்தது.
தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் 46 வயது பிரதான சந்தேகப்பேர்வழி பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நேற்றிரவு 10.50 மணிக்கு கைதானார் என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரொஸாக் முஹம்மட் கூறினார்.
ஒரு குத்தகையாளரான அந்நபர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய போது கைதானார் என்றும் இன்று காலை பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பீனல் கோட் பிரிவு 324, 109 கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 22 பேரில் மூவர் மீது கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
ஒரு சிவில் வழக்கில் அந்த வழக்கறிஞரிடம் தோல்வி கண்டதை தொடர்ந்து ஏற்பட்ட கோபமே வழக்கறிஞர் தாக்கப்பட்டதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.



















