சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று சீனாவில் உள்ள சாங்ஜியாங் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுடன் மோதியதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட யாங்சி 22 என்ற கப்பல், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட வேகா டிரீம் என்ற கப்பலுடன் மோதியதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் டிசம்பர் 31ஆம் தேதி கூறியது.
இரு கப்பல்களுமே தானியங்கள், நிலக்கரி போன்ற உலர்ந்த பொருள்களைக் கொண்டுசெல்ல உதவும் சரக்குக் கப்பல் வகையைச் சேர்ந்தவை என்றும், இந்த மோதலின் காரணமாக யாருக்கும் காயமில்லை என்றும், ஆனால் யாங்சி 22 கப்பலின் மேற்பகுதி சேதமடைந்ததாகவும், ஒன்பது டன் எடையுள்ள எரிபொருள் (எண்ணெய்) நீரில் பரவியதாகவும் அது குறிப்பிட்டது.
தற்போது அந்தக் கப்பல், சேதம் குறித்த மதிப்பீட்டிற்காக ஹெங்ஷா ஈஸ்ட் நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் சொன்னது.