பினாங்கு வனப்பகுதியில் போதைப்பொருள் ஆய்வுகூடமா?

ஜார்ஜ் டவுன்:

காங்காட் புக்கிட் கம்பீருக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆய்வுகூட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இடத்தை பினாங்கு போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் காவல்துறையால் 47 வயது உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக தைமூர் லாவூட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முஹமட் தெரிவித்தார்.

தகவல் மற்றும் புலனாய்வு அடிப்படையில், பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் காட்டில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சோதனையின் போது, ​​51,370 ரிங்கிட் பெறுமதியான போதைப் பொருட்களை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களையும் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

இந்தக் கும்பல் டிசம்பர் 2024 தொடக்கத்தில் இருந்து செயல்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 26,755 போதைப்பித்தர்கள் அல்லது 26,755 முறை பயன்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் ஆம்பெடமைன்/மெத்தாம்பேட்டமைன் பயன்படுத்தியிருப்பதாகவும், குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 10 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேகநபர் நேற்று முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அப்துல் ரோசாக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here