15 வயது மாணவருக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கோலாலம்பூர்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது மாணவரை காரிலும், பேருந்து நிறுத்தத்திலும் வைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 வயது ஆசிரியை, இன்று அந்த இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தஸ்னிம் அபு பக்கர், அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முதற்கட்ட குற்றத்தை (prima facie) நிரூபிக்கத் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்தார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது அந்த ஆசிரியை நீதிமன்றக் கூண்டில் அமைதியாகக் காணப்பட்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி இரவு 8 மணி மற்றும் 9 மணியளவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது:

ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் மாணவரிடம் பாலியல் நோக்குடன் தவறாக நடந்துகொண்டார் என்றும், கம்போங் பாரு (ஜாலான் ராஜா மூடா அப்துல் அஜீஸ்)பகுதியிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் மாணவரைத் தவறான முறையில் தொடும்படி தூண்டியதாகவும் அவருக்கெதிராக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14(a) மற்றும் 14(b)-ன் கீழ் கொண்டு வரப்பட்டன. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் கூடுதல் தண்டனையாக மேலும் 5 ஆண்டுகள் சிறை மற்றும் குறைந்தது 2 பிரம்படிகள் வழங்கப்பட வாய்ப்பிருந்தது.

இறுதியில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து அந்த ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here