விளையாட்டு துறையில், அபார சாதனை படைப்போருக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது, வருடா வருடம் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. மொத்தம் 4 வீரர்களை, மத்திய விளையாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் டி குகேஷ், ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உட்பட 4 பேர் இந்த விருதினை பெற உள்ளனர். முதலில், மனு பாக்கர் பெயரை தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது இறுதிப் பட்டியலில் பாக்கர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த இருவருடன் ஆடவர் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கும், கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை, வரும் 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குவார். குடியரசுத் தலைவர் மாளிகையில், விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், அதில், ‘‘விளையாட்டு அமைச்சகம் அமைத்த குழுவின் அடிப்படையில், உரிய ஆய்வுகளுக்கு பின்பு, கீழ்கண்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களுக்கு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









