ஜார்ஜ் டவுன்:
LRT இலகு ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படும் சுங்கை பினாங்கில் உள்ள நிலம், மலிவு விலை வீடமைப்பு திட்டத்திற்காக முன்பு ஒதுக்கப்பட்டது என்ற கூற்றை பினாங்கு அரசாங்கம் மறுத்துள்ளது.
உண்மையிலேயே LRT நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் முதலில் ஒரு பள்ளியைக் கட்டுவதற்காகவே ஒதுக்கப்பட்டது என்றும், இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே கல்வித் துறையுடன் இதைப் பற்றி விவாதித்தோம்என்றும் அம்மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் கூறினார்.
பின்னர் LRT நிலையத்திற்கான இடமாக இது அடையாளம் காணப்பட்டது, LRT நிலையம் அங்கு கட்டப்பட்டால், மீதமுள்ள நிலம் இனி ஒரு பள்ளிக்கு போதுமானதாக இருக்காது, மேலும் இது குறித்தும் ஏற்கனவே நாம் விவாதித்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
“உண்மையில், இந்த நிலம் ஒருபோதும் வீட்டுவசதிக்காக திட்டமிடப்படவில்லை,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் சுங்கை பினாங்கு LRT இலகு ரயில் நிலையம் கட்டுவதற்காக வரும் சனிக்கிழமை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடிக்கல் நாட்டுவார் என்றும் அவர் மேலும் கூறினார்.




















