
கோலாலம்பூர்:
இந்தியாவில் இருந்து சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை தருவது துரிதமாக அதிகரித்து வருகிறது என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் முதன் முறையாக மலேசியாவிற்கு வருகை தந்த இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேசமயம் கடந்த ஆண்டு ஏறத்தாழ 4 லட்சம் மலேசியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மக்களின் தொடர்புகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தியப் பிரஜைகளுக்கு இலவச விசா நுழைவை மலேசியா வழங்கி இருப்பதன் மூலம் இருநாட்டு மக்களுக்கும் இடையேயான பரிமாற்றங்கள் வலுவடைந்திருக்கின்றன என்றும் தூதர் குறிப்பிட்டார்.
2025இல் ஆசியான் – இந்தியா சுற்றுலா ஆண்டு என்பதாலும் 2026 மலேசியாவிற்கு சுற்றுலா புரியும் ஆண்டு என்பதாலும் சுற்றுலாத்துறை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வளர்ச்சி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேலும் வலுவடையும் என்றார் அவர்.

ஜனவரி 27ஆம் தேதி திங்கட்கிழமை தலைநகரில் உள்ள தங்கு விடுதியில் இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
டிஜிட்டல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்புப் பிரமுகராக இதில் கலந்து கொண்டார். மேலும் பல சிறப்பு வருகையாளர்களும் தூதரக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் விவேகமிக்க வளர்ச்சியும் மலேசிய மடானி வளர்ச்சியும் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கு இடையேயான நட்புறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவிற்கு இந்தியா வலுவான ஆதரவை அளிக்கிறது என்றும் அவர் சொன்னார். ஆசியானின் ஒருமைப்பாடு, நடுவண்தன்மை, இந்தோ பசிபிக் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா முனைப்புக் காட்டி வருவதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மலேசியா, ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டதாகவும் தூதர் கூறினார். நம்முடைய பங்காளித்து வத்தில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது என்றார் அவர்.
மலேசியாவிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான இருவழி வர்த்தகம் 2024இல் 20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2026இல் இதனை 25 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை இரண்டு அரசாங்கங்களும் கொண்டிருக்கின்றன. மலேசியாவில் 200க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன்மூலம் முதலீடுகள், தரமான வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



















