தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை புஷ்பலதா. 87 வயதான நடிகை புஷ்பலதா சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தமிழில் 1961ஆம் ஆண்டு வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை புஷ்பலதா. இதனைத் தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நல்வரவு, ராமு, தாயே உனக்காக, நானும் ஒரு பெண், கற்பூரம், ஜீவனாம்சம், பணமா பாசமா, தீர்க்க சுமங்கலி, திருமலை தெய்வம், சிட்டுக்குருவி, பகலில் ஒரு இரவு, ரத்தபாசம் போன்ற படங்களிலும் புஷ்பலதா நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தனது அசாத்திய நடிப்பின் மூலம் 1960, 70 மற்றும் 80-களில் தமிழ் சினிமாவில் படுபிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை புஷ்பலதா ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.





















