மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்புக்கு மனிதவள அமைச்சு 3 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

பந்திங்:

மனிதவள அமைச்சால் இந்தியர்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் (misi) எனப்படும் மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்புக்கு மனிதவள அமைச்சு 3 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக மிசி திட்டத்தின் பொறுப்பாளர் ஷாம் சிவராஜா தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்களின் சுய தொழில் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டிருக்கும் இதில் தற்போது சுமார் இருபது பயிற்சித் திட்டங்கள் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இவற்றை இன்னும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்பு திட்டம் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேரடிப் பார்வையில் இயங்கி வருகிறது. தற்போது வடக்கு, மத்திய, தெற்கு என மூன்று மண்டலங்களில் இது நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பயிற்சிகளை கண்காணித்து வருகின்றனர். இத்திட்டம் உள்ளூர் அரசு, அரசு சாரா இயக்கத் தலைவர்களின் ஆதரவோடு நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் மத்திய மண்டலத்தில் உள்ள கோலலங்காட் மாவட்டத்தில் கோலலங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் இரா.ஹரிதாஸ், கோலலங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் கு.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவோடு இரண்டு பயிற்சிகள் நடத்தப்பட்டன. தையல் பயிற்சி, முக ஒப்பனை என நடத்தப்பட்ட இதில் ஒவ்வொரு பயிற்சியிலும் 25 பேர் வீதம் இரண்டு பயிற்சிகளில் மொத்தம் ஐம்பது பேர் கலந்து கொண்டனர்.

பயிற்சிகளில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் மலேசிய திறன் முன்னெடுப்பு. இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். பயிற்சிகளில் கலந்து கொண்டவர்கள் தங்களின் வசதிற்கேற்ப சொந்தமாக தொழில் தொடங்கலாம். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் நடத்தப்பட்ட பயிற்சிகளில் கலந்து கொண்டவர்களின் சேவையை நாடும் நிறுவனங்களையும் தனியார் துறையினரையும் மனிதவள அமைச்சு அடையாளம் கண்டு சம்பந்தப்பட்டவர்களை அங்கு அனுப்பி வைக்கும்.

தங்கள் வட்டாரங்களில் இது போன்ற பயிற்சிகளை நடத்த விரும்பும் அரசு / அரசு சாரா இயக்கத்தினர் (misi) எனப்படும் மலேசிய இந்தியர் திறன் முன்னெடுப்பு பொறுப்பாளர்கள் அல்லது மனிதவள அமைச்சை தொடர்பு கொள்ளலாம் என்று ஷாம் சிவராஜா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here