வாஷிங்டன்:
அமெரிக்க அரசின் பணம் செலுத்தும் முறையில் குறைபாடுகள் உள்ளதாகவும், அதில் பாதிக்குப்பாதி மோசடி நடக்கிறது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அரசின் செலவினங்களை குறைப்பதற்காக டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு துறை ஒன்றை அவர் உருவாக்கி உள்ளார். அதிபர் தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த துறையின் தலைவராக உள்ளார்.
‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:டி.ஓ.ஜி.இ., குழுவும், அமெரிக்க கருவூலத்துறையும் இணைந்து கீழ்கண்ட முடிவுகளை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளோம்.
அரசின் அனைத்து செலவுகளுக்கும் பணம் தரும்போது, ‘பேமண்ட் கோட்’ குறிப்பிடுவது அவசியம். நிதி தணிக்கை செய்வதற்கு இது அவசியம். ஆனால், அது குறிப்பிடப்படாத காரணத்தினால், தணிக்கை செய்வது சிக்கலாக உள்ளது.
அனைத்து கட்டணங்களிலும், கருத்து பகுதியில், கட்டணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும். இதுவும் தற்போது காலியாக விடப்படுகிறது. மோசடியாளர்கள் அல்லது இறந்தவர்கள் அல்லது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படுபவர்களுக்கு பணம் செலுத்தக்கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதனை புறக்கணிக்கக் கூடாது. இந்த பட்டியலை பெறுவதற்கு தற்போது ஓராண்டு ஆகிறது. இது நீண்ட காலமாகும். இந்த பட்டியலை தினமும் முடியாத பட்சத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சரி பார்க்க வேண்டும்.
இந்த தேவையான மாற்றங்களை, நீண்ட காலமாக பணிபுரியும் அரசு ஊழியர்கள் அமல்படுத்தி இருக்க வேண்டும். இது ஏற்கனவே இல்லாதது முட்டாள்தனமானது.
ஆண்டுதோறும் எந்த தற்காலிக எண் இல்லாமல், தனிநபர்களுக்கு ஆண்டுதோறும் செலவினத்தொகை 100 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.9 லட்சம் கோடி) வழங்கப்படுகிறது என நேற்று என்னிடம் கூறப்பட்டது. இது சரியாக இருக்கும்பட்சத்தில், அதில் பலத்த சந்தேகம் உள்ளது.
இதில் பாதிக்குப்பாதி மோசடி நடப்பதாக கருவூலத்துறையினர் கூறுகின்றனர். இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது. உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.











