தைப்பூசத்தின் போது முருகப் பெருமானுக்கு அர்ப்பணிப்புடன் நிகழ்த்தப்படும் புனித சடங்கான இந்து காவடி நடனத்தை கேலி செய்யும் சர்ச்சைக்குரிய வீடியோவிற்காக எரா எஃப்எம்மின் 3 பாகி எரா நிகழ்ச்சியின் குழுவினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். தற்போது நிலையத்தின் சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், டிஜேக்கள் “வேல் வேல்” என்று கோஷமிட்டு சிரித்துக் கொண்டே காவடி நடனத்தைப் பின்பற்றுவதைக் காட்டியது.
எரா எஃப்எம்மின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு பதிவில் நபில் அஹ்மத், ஆசாத் ஜாஸ்மின், ராடின் அமீர் அஃபெண்டி அஹ்மத் அருவானி ஆகியோர் இந்த வீடியோவிற்கு மன்னிப்பு கேட்டு, குறிப்பாக இந்திய சமூகம் குறித்து பேசியது தவறு என்றும் ஒப்புக்கொண்டனர். நாங்கள் யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதை செய்யவில்லை. மேலும் ஒவ்வொரு தனிநபரின் நம்பிக்கைகள், மதிப்புகளை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம் என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
எங்களை மேம்படுத்திக் கொள்ள, குறிப்பாக எங்கள் விசுவாசமான எரா ரசிகர்களிடம் கருத்துகள், விமர்சனங்களைப் பெற நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். மீண்டும் ஒருமுறை, நாங்கள் செய்த தற்செயலான தவறுக்கு நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். இந்த காணொளி பரவலான விமர்சனங்களைப் பெற்றது, பலர் அதை இந்து மரபுகளை புண்படுத்துவதாகக் கூறினர்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான எம். சரவணன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்த நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக, தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், இந்த காணொளி தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகக் கூறினார்.
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (எம்சிஎம்சி) விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன், இதில் ஆஸ்ட்ரோ மற்றும் வானொலி நிலைய நிர்வாகத்தை எம்சிஎம்சி தலைமையகத்திற்கு முழு விளக்கம் அளிக்க வரவழைக்க வேண்டும். தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.









