கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலா பெசூட்டின் கம்போங் பெரிஸ் கவாட்டில் போலீசார் நடத்திய சோதனையில், அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் பட்டாசுகளை இறக்குவதில் மும்முரமாக இருந்த இருவர், கைது செய்யப்பட்டனர்.
காலை 9.30 மணியளவில் நடந்த சோதனையில், 24 மற்றும் 34 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 10,000 ரிங்கிட் மதிப்புள்ள 14 வகையான பட்டாசுகளும் கைப்பற்றப்பட்டன என்று, பெசூட் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் முஹமட் கூறினார்.
அதற்கு முன்னதாக, பண்டார் பாரு தானாஹ் மேராவில், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பல்நோக்கு வாகனம் சென்றதனை காவல்துறை பொது நடவடிக்கைகளின் பட்டாலியன் 7-ன் குழு கண்டறிந்தது.
அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனத்தை காவல்துறை பின்தொடர்ந்ததாக அவர் கூறினார்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, இரண்டு சந்தேக நபர்களும் அந்த வாகனத்திலிருந்து பட்டாசுகளை இறக்கும்போது கைது செய்யப்பட்டனர், ஆனால் வாகனத்தின் ஓட்டுநர் தப்பிச் சென்றதாகவும் அப்துல் ரசாக் கூறினார்.
வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் இந்த வியாழக்கிழமை (நாளை) வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.