வெளிநாட்டு பிள்ளைகளுக்கு குடியுரிமை பதிவு செய்வதில் ஊழல் செய்ததாக நம்பப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்தைக்கொண்ட மருத்துவர் உட்பட 16 பேரை எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதை அதன் துணைத் தலைமை ஆணையர் அமாட் குசாய்ரி யாஹ்யா உறுதிப்படுத்தினார்.
ஒப்ஸ் அவுட்லேண்டர், ஒப்ஸ் பிறப்பு ஆகியவற்றின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூரைச் சுற்றியுள்ள கிளினிக்குகள், வழக்கறிஞர்கள் நிறுவனங்கள் உட்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் வெளிநாட்டு பிள்ளைகளுக்கு மலேசியப் பிரஜைகளாக பதிவு செய்வதில் ஊழல் செய்தது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பிறப்பை உறுதிப்படுத்துவது, ஆவணங்களை வழங்குவது ஆகியவற்றில் பங்கு வகிக்கும் பல மருத்துவமனைகள், மகப்பேறு மையங்களை வைத்திருக்கும் டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு மருத்துவரும் தொடர்புள்ளவர் என்று நம்பப்படுகிறது.
போலியான பத்திரம் எனக் கண்டறியப்பட்டாமல் இருக்க மருத்துவமனை பிறப்பை உறுதிப்படுத்தும் கடிதங்கள் போன்ற துணை ஆவணங்களைப் பயன்படுத்தி பிறப்பு பதிவு விண்ணப்பங்களுக்கு உதவப்பட்டுள்ளது.








