மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசு(UAE), ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. நான்காம் தொழிற்புரட்சிக்கான மையத்தின் (C4IR) உலகளாவிய கூட்டமைவின் கீழ், இந்த மூன்று நாடுகளும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளையும், செயற்கை நுண்ணறிவு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்தும் முறைமைகளையும் சுற்றுவட்டார நாடுகளை ஊக்குவிப்பதற்கும், திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அடைய உதவுவதற்கும் இணைந்து செயல்படும். இதன்வழி செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில் நுட்பத்தில் மக்கள் பயனடைவதோடு, பொருளாதாரத்தில் வலுப்பெறவும் உதவும்.
இந்த முயற்சி, Dubai Future Foundation (C4IR-UAE-இன் சட்டப்பூர்வ அமைப்பு), C4IR Rwanda மற்றும் MyDigitalCorporation எனப்படும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம் இடையே நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பரிமாற்றத்தின் வழி உறுதியானது. தற்போது நடைபெற்று வரும் துபாய் AI வாரத்தையொட்டி இந்தப் புதிய ஒத்துழைப்பு துவக்கம் கண்டது. உலகளாவிய நிலையில், மலேசிய ஐக்கிய அரபு சிற்றரசுநாடுகளுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமையளிப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். இதன்வழி செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒன்றிணத்து, வலுப்படுத்துவதோடு நிலையான எதிர்காலத்தை நோக்கி இலக்கவியல் மாற்றங்களை துரிதப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த ஒத்துழைப்பின் விளைவாக உருவாகும் C4IR செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு திட்டம், கண்டங்கள் முழுவதும் உள்ள செயற்கை நுண்ணறிவு முன்னோடிகளையும் நிபுணர்களையும் இணைக்கும் ஒரு முக்கியமான பாலமாக இருக்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கூறினார். அறிவார்ந்த பகிர்தலின் வழி பல சவால்களை எதிர்கொள்ளவும், செயற்கை நுண்ணறிவின் மகத்தான திறனைப் பயன்படுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அமைச்சர் கோபிந்த் தமதறிகையில் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி, மூன்று நாடுகளும் C4IR செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டன. முன்னதாக, இந்த திட்டம் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 2024 ஆண்டு கூட்டத்தின்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ருவாண்டாவை மட்டுமே உள்ளடக்கியிருந்தது; தற்போது நமது நாடும் இதில் இணைந்துள்ளது. இந்த அறிவு பரிமாற்ற தளம் செயற்கை நுண்ணறிவு துறையில் உள்ள தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், துறைசார் வல்லுனர்கள்,இலக்கவியல் தொழில்நுட்ப சிறப்பு திறன்கள் ஆகியவற்றைஇணைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் கண்ட இந்தச் செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு அனைத்துலக ரீதியில் பல நன்மைகளைக் கொண்டுவரும் அதேவேளையில் நமது நாட்டின் வளப்பத்திற்கு துணை நிற்கும் என அமைச்சர் தமதறிக்கையின் வழி தெரிவித்தார்.








