பொருளாதார வளர்ச்சியில் மகளிர் தனித்துவத்துடன் செயல்பட வேண்டும் நான்சி ஷுக்ரி வலியுறுத்தல் .

புத்ராஜெயா,

பொருளாதார வளர்ச்சிக்கு மகளிர் ஒரு தனித்துவத்துடன் செயல்பட்டு அதன் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று மகளிர் குடும்பம் சமூக நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜா நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார்.

தலைமைத்துவம், அவர்களின் பிரதிநிதித்துவத்தில் இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயணிப்பதை உறுதி செய்வதிலும் மிக உயரிய பங்களிப்பை வழங்கவேண்டிய கால கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

இங்கு கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி புத்ராஜெயா ஸெனித் ஹோட்டலில் அமைச்சின் ஏற்பாட்டில் மகளிருக்கான அனைத்துலக மேம்பாட்டுக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து அவர் சிறப்புரை நிகழ்த்தினார்.

2025 ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றிருக்கும் மலேசியா பல்வேறு நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் நடத்தியது.

தம்முடைய அமைச்சு கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கி தலைமைத்துவம், வழிகாட்டுதல் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இத்திட்டத்தில் தலைமைத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூக மேம்பாடு, தொழில் நுட்பம், சட்டம், பாதுகாப்பு, நல்வாழ்வு, கல்வி, சுகாதாரம் என 10 முக்கியமான துறைகள் இடம்பெற்றுள்ளன.

ஆற்றலைக் கொண்டவர்களாகப் பெண்கள் திகழ வேண்டும். இந்த ஆக்கப்பூர்வமான தலைமைத்துவத்தின் வழி நாட்டில் உள்ள பெண்களுக்கு அதன் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய அல்லது வழிகாட்டக்கூடிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று நான்சி ஷுக்ரி அறிவுறுத்தினார். மேலும் புத்தாக்கக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப வளமை, பொதுச்சேவை, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிலும் மகளிர் அதீத கவனம் செலுத்தி அவற்றின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சின் பிரதான பொறுப்பாளர்கள், உயர் அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மகளிர், உயர்கல்வி மாணவிகள் உட்பட 400க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here