உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்: விமான சேவையை நிறுத்தியது ரஷ்யா

மாஸ்கோ:

மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், 4 முக்கிய விமான நிலையங்களில் விமான சேவையை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்திவிட்டது. இதனால் பயணிகள் சேவைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இவ்வாறு ஒரு புறம் இருக்க இருநாடுகளும் ஒன்றுக்கொன்று தாக்கிக்கொண்டு தான் உள்ளன.

இந்நிலையில் உக்ரைன் தரப்பில் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்ட 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை, ரஷ்ய தரப்பில் இடை மறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது:

இந்தத் தாக்குதலில் மாஸ்கோவைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உக்ரைனின் ட்ரோன்கள் தாக்கியதால், மற்ற ஒன்பது மண்டல ரஷ்ய விமான நிலையங்களும் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்திவிட்டன. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

கவர்னர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் கூறுகையில்,

உக்ரைன் நடத்திய தாக்குதலில் குர்ஸ்க் பகுதியில் இரண்டு பேர் காயமடைந்தனர். மேலும் வோரோனேஜ் பகுதியில் சில சேதங்கள் பதிவாகியுள்ளன.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தைக் குறிக்கும் விழா மாஸ்கோவில் நடக்கிறது. இதையொட்டி அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்த 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக இந்த ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here