நாட்டின் நலனே முக்கியம்: பாகிஸ்தானுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தியது தமிழ்நாடு

சென்னை:

இந்தியா – பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டன.

100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டாலும், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், உயிா் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழகத்திலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்றும் அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும் சலுகைகளையும் தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டதையடுத்து, அதை ஏற்று தமிழக மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினா்.

“இந்தியாவின் மருந்துச் சந்தை மிகப் பெரியது. ஆண்டுதோறும் ரூ. 2.40 லட்சம் கோடி மதிப்பிலான மருந்துகள் உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன. தமிழகத்திலிருந்து மட்டும் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடி வரையிலான மதிப்புடைய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன,” எனத் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநில மருந்து உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் டாக்டா் ஜெயசீலன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டும் பாகிஸ்தானுக்கு மருந்துகள், மூலப்பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

“மத்திய அரசிடமிருந்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை இந்நிலை தொடரும். அதே நேரத்தில் பிற நாடுகளுக்கான ஏற்றுமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை. போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்கூட்டியே கூடுதலான மருந்துகளைத் தங்களுக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளன,” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here