தெங்கு ஜஃப்ருல் அம்னோவில் இருந்து விலகி, பிகேஆரில் சேர முற்படுகிறார்

தெங்கு ஜஃப்ருல் அம்னோவை விட்டு வெளியேறி பிகேஆரில் சேர திட்டமிட்டுள்ளார். ஒரு பேஸ்புக் பதிவில் தெங்கு ஜஃப்ருல், அம்னோ உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் இன்று தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்ததாகக் கூறினார்.

அவரது முடிவு, ஆண்டு இறுதியில் செனட்டர் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு, அம்னோவை விட்டு வெளியேறி பிகேஆரில் சேருவார் என்ற பிப்ரவரியில் வந்த வதந்திகளை உறுதிப்படுத்துகிறது. பிகேஆரில் சேருவதற்கான தனது விருப்பத்தை, பிரதமரும்  கட்சித் தலைவருமான அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்ததாக தெங்கு ஜஃப்ருல் கூறினார். அன்வாரின் அமைச்சரவையில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக தெங்கு ஜஃப்ருல் பணியாற்றுகிறார்.

பிகேஆர் உறுப்பினராக விண்ணப்பிக்க வழக்கமான நடைமுறையைப் பின்பற்றுவேன் என்றும் அவர் கூறினார். அம்னோவை விட்டு வெளியேறுவதற்கான தனது முடிவு எளிதான ஒன்றல்ல என்றும், அம்னோ கட்சித் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி உட்பட கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நண்பர்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அவர் கேட்டதாகவும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

நான் 1997 முதல் அம்னோ உறுப்பினராக இருப்பதால், இதைப் பற்றி நீண்ட நேரம் யோசித்து வருகிறேன். இறுதியில், இந்த முடிவு சுயமாக எடுத்தது என்றும்  பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக இணக்கத்தன்மையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

தெங்கு ஜஃப்ருல் முன்பு அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினராக இருந்தார். மேலும் கோத்தா ராஜா அம்னோ பிரிவின் தலைவராகவும் இருந்தார். அவர் 2022 பொதுத் தேர்தலின் போது கோல சிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் நான்கு முனைப் போட்டியில் அமானாவின் துல்கிஃப்ளி அகமதுவிடம் 1,002 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராகும் முயற்சியில் அவர் பிகேஆரில் சேரத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவின. பின்னர் மாநில அளவிலான பதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அவர் மறுத்தார். ஆனால் தெங்கு ஜஃப்ருல் கட்சியில் சேருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அன்வார் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து ஊகங்கள் மேலும் அதிகரித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here