பிரான்ஸ்: வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் பலி; 192 பேர் காயம்

பாரீஸ்,ஜெர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும்.

இதனை தொடர்ந்து, பிரான்சின் பாரீஸ் நகரின் தெருக்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு உள்ளான் என தேசிய போலீஸ் படை தெரிவித்தது. இதேபோன்று பாரீஸ் நகரில் நடந்த கொண்டாட்டத்தின்போது, கார் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், ஸ்கூட்டரில் வந்த நபர் பலியானார். 20 வயதுடைய அந்த நபர், வன்முறையால் பலியானாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதனால் வன்முறைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த, பாரீஸ் நகர் முழுவதும் 5,400 போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால் ஏற்பட்ட வன்முறையில், 192 பேர் காயம் அடைந்தனர். 264 வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 692 தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. 560 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலில் சிக்கிய காவலர் ஒருவர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் சமீபத்தில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 70 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், பாரீஸ் நகரில் நடந்த கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here