சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு தெங்கு ஜஃப்ருலை அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்

ஷா ஆலம்: தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் அம்னோவிலிருந்து ராஜினாமா செய்து பிகேஆரில் சேர முடிவு செய்தது பொறுப்பற்ற செயல் என்பதோடு ஏமாற்றமளிப்பதாக சிலாங்கூர் அம்னோ  இளைஞர் தலைவர் விமர்சித்துள்ளதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ முகமது இம்ரான் தாம்ரின், இதுபோன்ற செயல்  நாட்டின் அரசியல் நடைமுறைகளில் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தாது என்று கூறியதாக  மலாய் மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவையில் அவரது பதவி முன்பு ஒரு மூத்த அம்னோ தலைவர் என்ற அவரது திறனை அடிப்படையாகக் கொண்டது. அவர் கட்சியை விட்டு வெளியேறி பிகேஆரில் சேரும்போது, ​​அவர் தனது அரசாங்கப் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று அவர் சினார் ஹரியானிடம் கூறினார்.

ஒற்றுமை அரசாங்க அமைச்சரவையில் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்களின் எண்ணிக்கையை பராமரிக்குமாறு சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு அம்னோ தலைமையை வலியுறுத்தியது.

அம்னோவிலிருந்து (ஏழு) அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் (ஐந்து) எண்ணிக்கை தக்கவைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கத்தில் கட்சியின் குரலைப் பேணுவதற்கு இது முக்கியம் என்று திங்கள்கிழமை (ஜூன் 2) இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இம்ரான் மேலும் வலியுறுத்தினார்.

முன்னதாக, தெங்கு ஜஃப்ருல் பிகேஆரில் சேர அம்னோவிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டது. அம்னோ உச்ச மன்ற  உறுப்பினர், கோத்தா ராஜா அம்னோ தலைவர், அம்னோ உறுப்பினர் பதவிக்கான ராஜினாமா கடிதங்கள் கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

கூடுதலாக, பிகேஆரில் சேருவதற்கான தனது விருப்பத்தை அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொதுச் செயலாளர் புஸியா சாலே ஆகியோரிடம் தெரிவித்ததாக தெங்கு ஜஃப்ருல் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, சக கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோவில் தனது ஈடுபாடு முழுவதும் அளித்த ஆதரவு,  ஊக்கத்திற்கு தெங்கு ஜஃப்ருல் தனது நன்றியைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here