கோத்தா பாருவில் இன்று அதிகாலை, அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளி அருகே, ஜாலான் மாச்சாங்-கோலா க்ராய் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் காயமடைந்தனர். மாச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஷஃபிகி ஹுசின், நள்ளிரவு 12.05 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், கோலா கிராய்-கோத்தா பாரு திசையில் சென்று கொண்டிருந்த ஹோண்டா அக்கார்டும் பெரோடுவா ஆக்சியாவும் விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்தார்.
ஹோண்டா அக்கார்டு ஓட்டுநரான ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் பெரோடுவா ஆக்சியாவின் பெண் ஓட்டுநர், மாச்சாங் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். பெரோடுவா ஆக்சியாவில் பயணித்த ஒரு பதின்ம வயது பெண் காயமடைந்து மச்சாங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் ஹோண்டா அக்கார்டு கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பெரோடுவா ஆக்சியாவுடன் மோதியது கண்டறியப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அஹ்மத் ஷஃபிகி கூறினார்.
விபத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஃபாத்தின் நூர்ஹானிஸ் இப்ராஹிமை 011-1454020 என்ற எண்ணில் அல்லது மாச்சாங் காவல் செயல்பாட்டு அறையை 09-9751222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
இரண்டு ஓட்டுநர்களும் பெரோடுவா ஆக்சியாவில் உடன் பயணித்த பயணியும் விபத்தின் இடிபாடுகளில் சிக்கியதாக மாச்சாங் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுத் தளபதி முகமட் சுஹைமி ரசாலி தெரிவித்தார். தீயணைப்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை அகற்ற மின் அலகு மீட்பு கருவிகளைப் பயன்படுத்தினர் என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.









