பெர்லிங்கில் வெள்ளப் பிரச்சினை: வளர்ச்சிப் பணிகள் உடனடியாக நிறுத்தம் – குறைபாடுகள் சரிசெய்த பின்னரே மீண்டும் அனுமதி

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

பெர்லிங் தாமான் பெஸ்தாரி ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பிரச்சினை, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், வசதி தொடர்பான கவலைகளைத் தொடர்ந்து, ஜோகூர் மாநில வீடமைப்பு, ஊராட்சி துறை ஆட்சிக்குழுத் உறுப்பினர் டத்தோ முகமட் ஜாப்னி ஷுகோர், தேசிய ஒற்றுமை, பாரம்பரியம், கலாசார ஆட்சிக்குழுத் உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்றம், நீர்ப்பாசன, வடிகால் துறை, சுற்றுச்சூழல் துறை, பொதுப்பணித் துறை, பிற தொழில்நுட்ப அமைப்புகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆய்வின்போது, குறித்த வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநில அரசு உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஜாப்னி தெரிவித்தார். ஜோகூர் மாநில மாநகர மன்றம் தொடர்புடைய தொழில்நுட்ப அமைப்புகளும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் வரை எந்தப் பணியும் தொடர அனுமதிக்கப்படாது என்றார்.

வடிகால் அமைப்பு, சாலை சுத்தம், தூசி கட்டுப்பாடு, கட்டுமானப் பகுதியைச் சுற்றியுள்ள பாதுகாப்புத் தடுப்பு, கட்டுமான லாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பின்னரே பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மாநில அரசின் விரைவான, உறுதியான நடவடிக்கையை வரவேற்ற பி. பன்னீர்செல்வம், பெர்லிங் சட்டமன்ற உறுப்பினராக ஜோகூர் பாரு மாநகர மன்றம், தொடர்புடைய அனைத்து துறைகளுடன் இணைந்து இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணிப்பேன் என்றார்.

பெர்லிங் மக்களின் பாதுகாப்பு, நிம்மதி, நலனே எப்போதும் தமது முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here