மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி நேற்று வெடித்ததைத் தொடர்ந்து, பாலி, லோம்போக் லாபுவான் பாஜோவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் ஏராளமான விமானங்களை ஏர் ஆசியா ரத்து செய்தது அல்லது மறு அட்டவணைப்படுத்தியது. கிழக்கு சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,703 மீட்டர் உயர இரட்டை சிகர எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கியின் வெடிப்பு 10 கிமீ உயர சாம்பல் கோபுரத்தை வானத்தில் அனுப்பியது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியில் உள்ள எரிமலை சாம்பல் மேகங்கள் பாதுகாப்பான விமான நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று ஏர் ஆசியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏர் ஆசியா மலேசியா (AK), ஏர் ஆசியா இந்தோனேசியா (QZ) மற்றும் ஏர் ஆசியா எக்ஸ் மலேசியா (D7) ஆகியவற்றால் இயக்கப்படும் விமானங்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் தனது விருந்தினர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட அனைத்து விருந்தினர்களுக்கும் அவர்களின் விமான நிலை மற்றும் மீட்பு விருப்பங்கள் குறித்து அறிவித்துள்ளதாகவும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது. அடுத்த கிடைக்கக்கூடிய விமானத்தில் விருந்தினர்கள் தங்கள் பயணங்களை பாதுகாப்பாக மீண்டும் தொடங்க முடியும் என்பதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுவதாக அது கூறியது.
ஏர் ஆசியா மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவதுடன் அதன் பயண ஆலோசனையை புதுப்பிக்கும் என்று அது கூறியது. எரிமலை வெடிப்பு காரணமாக பாலிக்குச் செல்லும் புறப்படும் குறைந்தது இரண்டு டஜன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இன்று முன்னதாக அனைத்துலக செய்தி நிறுவனமான AFP தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான ஜெட்ஸ்டார், விர்ஜின் ஆஸ்திரேலியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக பாலியின் அனைத்துலக விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர், சீனாவின் ஜூனியாவோ ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்பட்ட பல உள்நாட்டு ஏர் ஆசியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பெய்தது, நேற்று தாமதமாக குறைந்தது ஒரு கிராமத்தையாவது வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
நவம்பரில், மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்தது. ஒன்பது பேர் உயிரிழந்த வேளையில் சுற்றுலாத் தீவான பாலிக்கு செல்லும் ஏராளமான அனைத்துலக விமானங்களை ரத்து செய்து ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.









