ஈரான்-இஸ்ரேல் மோதல்… ரகசிய தகவல்களை பரிமாறி கொள்ள ரஷியா-சீனா ஒப்புதல்

மாஸ்கோ,ஓராண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த பதற்ற சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடனான போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சி நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சி முதல்கட்டத்துடன் நின்று போனது. இதனை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் சமீபத்தில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

200-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா மற்றும் ரெஹோவோத் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், ஈரானின் ஏவுகணை கிடங்கில் 3-ல் ஒரு பகுதி அழிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தது.

இந்த சூழலில், ஈரான் நாட்டின் மத்திய தெஹ்ரானில் நடந்த வான்வெளி தாக்குதலில், மிக மூத்த ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் அலி ஷாத்மனி என்பவரை படுகொலை செய்து விட்டோம் என்று இஸ்ரேல் கடந்த 2 தினங்களுக்கு முன் தெரிவித்தது. கடந்த 13-ந்தேதி நடந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷீத் மரணம் அடைந்த நிலையில், அவருக்கு பதிலாக ஷாத்மனி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் பதவிக்கு வந்த ஒரு சில நாட்களில் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகி உள்ளார். இது உளவு பிரிவு தலைமையிலான துல்லிய தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த பதற்றம் நிறைந்த சூழலில், ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நேற்று வலியுறுத்தியது. ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் அரசியல் ரீதியிலான மற்றும் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதுபற்றி ரஷிய அதிபர் புதின், ஐக்கிய அரபு அமீரக தலைவர் முகமது பின் சையத் அல் நஹியானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இவ்விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ரஷியாவின் வெளியுறவு கொள்கைக்கான உதவியாளர் யூரி உஷாகோவ் இன்று கூறும்போது, சீனா மற்றும் ரஷியாவின் தலைவர்கள் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு நீண்ட நேரம் ஆலோசித்தனர் என்றார்.

தொடர்ந்து அவர், சர்வதேச சட்டத்தின் விதிகளை மீறிய இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளின் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

அதிபர் புதின் மற்றும் ஜின்பிங் இருவரும் பல மணிநேரம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் தகவலை பற்றி பகிர்ந்து கொள்ள ஏதுவாக, தங்களுடைய தொடர்புடைய அமைப்புகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது என ஒப்பு கொண்டனர் என்றார். இதனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையேயான மோதல் தொடர்பான ரகசிய தகவல்களை இவ்விரு நாடுகளும் பரிமாறி கொள்ள முடிவு செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here