பறவை மோதியதில் டாக்கா-சிங்கப்பூர் விமானம் அவசரத் தரையிறக்கம்

டாக்கா:

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு இன்று (ஜூன் 27) புறப்பட்ட பங்ளாதேஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதைத் தொடர்ந்து, அது டாக்காவில் அவசரமாகத் தரையிறங்கியது.

ஹஸ்ரத் ஷாஹ்ஜலால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 8.38 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், பிற்பகல் 2.40 மணிக்கு சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் வந்திறங்க வேண்டியிருந்தது.

விமானம் புறப்பட்டு ஏறக்குறைய 20 நிமிடங்களில் 2,500 அடி உயரத்தை எட்டியவுடன், இயந்திரப் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிந்துகொண்ட விமானி, உடனே டாக்காவுக்குத் திரும்ப முடிவெடுத்தார்.

பின்னர் அந்த விமானம் காலை 8.59 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 154 பயணிகளும் ஏழு பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்தனர்.

விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகள் ஓடுபாதையைப் பரிசோதித்தனர். ஆனால், அந்நியப் பொருள்களோ பறவைச் சிதைவுகளோ கண்டறியப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் முதலில் கூறியிருந்தனர்.

எனினும், இது பறவை மோதியதன் காரணமாக இருக்கலாம் என பொதுத் தொடர்பு மேலாளர் ரவ்ஷான் கபீர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here