பினாங்கின் பயான் லெபாஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திங்களன்று கண்டெடுக்கப்பட்ட ஒரு தாய், குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பினாங்கு மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் இருவரின் உடல்களிலும் காயங்கள் அல்லது குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்று திமூர் லாட் காவல்துறைத் தலைவர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
அழுகிய நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை என்று அவர் தெரிவித்ததாக கோஸ்மோ செய்தி வெளியிட்டிருந்தது. ஜாலான் புக்கிட் கம்பீரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40 வயதுடைய பெண்ணும் அவரது இரண்டு வயது மகளும் இறந்து கிடந்த வீட்டில் இருந்து வெளியான துர்நாற்றத்தைத் தொடர்ந்து அண்டை வீட்டார் அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தார். முதலுதவி வழங்கும் குழு உடல்கள் ஏற்கெனவே சிதைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.










