கோலாலம்பூர்,
ஊராட்சி மன்றத்தால் மேற்கொள்ளப்படும் மை கியோஸ் திட்டத்தின் அமலாக்கத்தில் அல்லது அந்த வசதியைப் பெறுவதில் ஊழல், முறைகேடு இருக்குமானால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் செயல்களை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.
இந்தத் திட்டம் தொடர்பில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ளும் புலன் விசாரணையை அமைச்சு வரவேற்கிறது என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
அரசாங்கத்தின் ஒவ்வொரு செயல் திட்டமும் வெளிப்படையாகவும் நன்னெறிமிக்கதாகவும் ஊழல் அம்சங்களிலிருந்து முற்றாக விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியம் என்றும் அமைச்சின் அறிக்கை மேலும் தெரிவித்தது.
வெளிப்படையான விலை அறிவித்தல் மூலமாகத்தான் 133

ஊராட்சித் தரப்பினர் மை கியோஸ் குத்தகையாளர்களை நியமனம் செய்திருக்கின்றனர் என்றும் அது தெளிவுப்படுத்தியது.
மை கியோஸ் 2.0 கடையின் உச்ச வரம்பு செலவு 25,000 ரிங்கிட் என ஊராட்சித் துறை நிர்ணயித்திருக்கிறது. நாடு முழுவதும் அந்தந்த ஊராட்சி மன்றங்களால் 795 மை கியோஸ் குத்தகைணாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மை கியோஸ் கடைகளை வாங்குவதற்கும் அவற்றை அமைப்பதற்கும் இவர்கள் நியமனம் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மை கியோஸ் நிர்மாணிப்பு டெண்டர் தொடர்பில் ஊழலும் முறைகேடும் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து எம்ஏசிசி விசாரணை நடத்துகிறது என அதன் புலனாய்வுப் பரிவு மூத்த இயக்குநர் டத்தோ ஸைனுல் டாருஸ் கூறியிருக்கிறார். இந்த விஷயம் தொடர்பில் அரசியல் கட்சி ஒன்று புகார் செய்ததையடுத்து எம்ஏசிசி விசாரணை நடத்துகிறது. கடந்த மே 22ஆம் தேதி வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு தானாகவே முன் வந்து மை கியோஸ் திட்ட அமலாக்கம் தொடர்பான ஆவணங்களை எம்ஏசிசியிடம் ஒப்படைத்திருக்கின்றது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.








