ஜெனீவா,
உலக அமைதியும், நீதியும், நலனும் அனைத்திற்கும் உரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஐக்கிய நாடுகள் (ஐ.நா) போன்ற உலகளாவிய அமைப்புகளில் உடனடி மறுசீரமைப்பு (reform) தேவைப்படுவதாக மலேசியா வலியுறுத்தியுள்ளது.
இந்த வேண்டுகோள், ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகம், Palais des Nations-ல் நேற்று நடைபெற்ற ஆறாம் உலக பாராளுமன்ற தலைவர்கள் மாநாட்டின் பொது விவாதத்தில் பங்கேற்ற மலேசியா பாராளுமன்ற சபாநாயகர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல்லா ஆற்றிய உரையின் போது முன்வைக்கப்பட்டது.
ஜொஹாரி தனது உரையில் மூன்று முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டார்:
Inter-Parliamentary Union (IPU) மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுக்கிடையே மாறி மாறி உரையாடும் ஒரு நிரந்தர முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பாராளுமன்றங்களின் குரலும் கேட்கப்பட வேண்டும் என்றார்.
COVID-19 பெருந்தொற்றிலிருந்து பெற்ற பாடங்களின் அடிப்படையில், உலகளாவிய பேரிடர்களின் போது பாராளுமன்றங்களுக்கிடையே விரைவு ஒத்துழைப்பு ஏற்படுத்தும் மெக்கானிசம் (rapid-response mechanism) உருவாக்கப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை கண்காணிக்க, பாராளுமன்ற மேலாண்மை வழிகாட்டுதல் நடைமுறைகள் (guidelines for parliamentary oversight) உருவாக்கப்பட வேண்டும். இது, தானியங்கி உலகில் மனித பொறுப்பை (human accountability) பாதுகாக்க உதவும் என்றார்.
ASEAN நாடுகளின் 46வது Inter-Parliamentary Assembly (AIPA) கூட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் மலேசியா நடத்தவுள்ளது. அதன் தலைவராகவும் இருப்பவர் ஜொஹாரி.
“நாம் நினைவில் கொள்ள வேண்டும்: நலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால், பணக்காரரும் ஏழையும், ஆணும் பெண்ணும், நகரமும் கிராமமும் இடையிலான பாகுபாடுகளை நீக்க வேண்டும். நீதி என்பது, பாலஸ்தீன மக்களுக்கு சுயாட்சி உரிமை வழங்கப்படுவதற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதையும் பொருள்படுத்துகிறது,” என்றார் அவர்.
“இந்த மாநாடு வெறும் பேச்சுவட்டமாக இருக்கக்கூடாது. இது செயலில் இறங்கும் ‘வொர்க் ஷாப்’ ஆக இருக்க வேண்டும். இங்கு உருவாகும் யோசனைகள் செயல் திட்டங்களாக மாற வேண்டும்,” என வலியுறுத்திய ஜொஹாரி, “உலகம் குழப்பத்தில் இருந்தாலும், எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் அமைதி, நீதி மற்றும் அனைவருக்கும் நலம் தேடி பணி செய்கின்றனர்,” என்றார்.
அத்துடன், ASEAN நாடுகள், ஐ.நா கட்டளைகளையும் நோக்கங்களையும் முழுமையாக மதிக்கின்றன என்றும் அவர் கூறினார்.




















