நாடு முழுவதும் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக வளாகங்கள் சோதனை – 459 புகைபிடிப்பு குற்றச்சாட்டு

கோலாலம்பூர்,

கடந்தாண்டு அக்டோபர் 1 முதல் ‘ஓப்ஸ் செலமாட் பாபா’ எனப்படும் நுரையீரல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சு நாடு முழுவதும் 2,81,381 வர்த்தக வளாகங்களில் சோதனை நடத்தியுள்ளது.

இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டுக்கான பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள் கட்டுப்பாட்டு சட்டம் 852ன் கீழ், 459 விசாரணை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்லி அகமது தெரிவித்தார்.

அவரின் விளக்கத்தில், புகைபிடிக்கும் பொருட்கள் விளம்பரம் செய்தல் (பிரிவு 7) குற்றச்சாட்டில் 340 விசாரணைகள், விலை நிர்ணயம் மற்றும் நிபந்தனைகள் மீறல் (பிரிவு 14) குற்றச்சாட்டில் 68 விசாரணைகள்,
பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் விதிகளை மீறல் (பிரிவு 15) குற்றச்சாட்டில் 51 விசாரணைகள் ஆகியன தொடங்கப்பட்டுள்ளன.

“மின்னியல் சிகரெட்டுகள் மற்றும் வேப் போன்ற புதுமையான புகைபிடிக்கும் பொருட்களின் தீங்குகள் எதிர்கால தலைமுறையினருக்கு ஆபத்தாக மாறுவதை தடுக்கும் நோக்குடன், அவற்றின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என ஜூல்கிப்லி தெரிவித்தார்.

852வது சட்டத்தை மீறும் நபர்கள், அதிகபட்சமாக RM100,000 அபராதம், அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் அனுபவிக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here