சுபாங் ஜெயா,
மத்திய அரசின் பத்து லட்சம் மலிவு விலை வீடுகள் நிர்மாணத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், சிலாங்கூர் அரசு 2028ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் வீடுகள் கட்டும் இலக்கை நிர்ணயித்துள்ளதாக மாநில வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
“இதே வரை 76,000க்கும் மேற்பட்ட வீடுகள் சிலாங்கூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மக்கள் மலிவு விலையில் வசதியான வீடுகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. எஞ்சிய வீடுகளையும் நிர்மாணித்து 2028க்குள் இலக்கை அடைய முடியும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
இன்று ஸ்ரீ கெம்பாங்கான் பகுதியில் உள்ள ஹோட்டலில் நடந்த ‘ரூமா சிலாங்கூர் கூ ரெசிடென்ஸி ஜெயா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களுக்கு முதன்முதலாக பணத்தைத் திருப்பி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது, அவர் இதனை கூறினார்.
இந்த விழாவில், சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்துடைமை வாரியத்தின் (LPHS) துணை நிர்வாக இயக்குநர் முகமட் ஹபீஸ் ஹாசன் மற்றும் ஸ்ரீ கெம்பங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை, 13வது மலேசியத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2026 முதல் 2035 வரை 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பத்து லட்சம் மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்தார்.
























