மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) புகையிலை, சிகரெட் மற்றும் சிகார் கடத்தலில் தொடர்புடையதாக விசாரணைக்கு உட்படுத்திய 14 நிறுவனங்களும், சிகரெட் இறக்குமதிக்கான செல்லுபடியான உரிமங்களை பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. ஓப் சிகாரோவின் கீழ் விசாரணை இன்னும் நடந்து வருவதாக MACC வட்டாரம் தெரிவித்துள்ளது.
MACC சம்பந்தப்பட்ட நிறுவன இயக்குநர்கள், பிரதிநிதிகளிடமிருந்தும் வாக்குமூலங்களை எடுத்துள்ளதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை சோதனைகளில் போலி வரி முத்திரைகள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. ஆனால் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த வட்டாரம் கூறியதாக உதுசான் மலேசியா தெரிவித்துள்ளது.
இறக்குமதி செயல்பாட்டின் போது தவறான சுங்கக் குறியீடுகளைப் பயன்படுத்துவது அல்லது தயாரிப்பு விவரங்களை மாற்றுவது உட்பட தவறான அறிவிப்புகளை நிறுவனங்கள் செய்திருப்பது கண்டறியப்பட்டதாக வட்டாரம் மேலும் கூறியது.
ஆகஸ்ட் 20 அன்று, MACC புகையிலை, சிகரெட்டுகள் சுருட்டுகளை கடத்தியதாகக் கூறப்படும் நிறுவனங்களை சோதனை செய்ததாகவும், இதன் விளைவாக 2020 மற்றும் 2024 க்கு இடையில் 250 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூரில் புகையிலை, சுருட்டு மற்றும் மதுபான விநியோக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வணிக வளாகங்கள், நிறுவன உரிமையாளர்களை இந்த சோதனைகள் குறிவைத்ததாக ஒரு வட்டாரம் மேற்கோள் காட்டியது.
ஊழல் தடுப்பு நிறுவனம் சுமார் 218 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தனிப்பட்ட, நிறுவன வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது. அதே நேரத்தில் மேலும் விசாரணைகளை எளிதாக்குவதற்காக சுங்கத் துறை பல நிறுவனங்களின் இறக்குமதி உரிமங்களை இடைநிறுத்தியுள்ளது.
அமலாக்க நிறுவன அதிகாரிகள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது. உள்நாட்டு வருவாய் வாரியம், பேங்க் நெகாரா மலேசியா, சுங்கத் துறையுடன் இணைந்து MACC இன் சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு இந்த சோதனைகளுக்கு தலைமை தாங்கியது.









