கோலாலம்பூர்:
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA Appreciation Aid) உதவித் திட்டம், நேற்று, ஐந்தாவது நாளாக, சீராகச் செயல்பட்டது. நேற்று இரவு 9.30 மணி வரை, 1.7 மில்லியன் பயனீடாளர்கள் RM106.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளனர்.
நிதி அமைச்சு, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், பரிவர்த்தனை வெற்றி விகிதம், 99.5% ஆக நிலையாக இருந்தது என்று தெரிவித்தது.
கடந்த நான்கு நாட்களாக, அமைப்பில் செய்யப்பட்ட மேம்பாடுகள் மற்றும் செயலாக்கத் திறன் விரிவாக்கமே, இந்த நிலைத்தன்மைக்குக் காரணம் என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த உதவித் திட்டம், ஆகஸ்ட் 31-ஆம் தேதி, தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும், 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது 30% பயனீடாளர்கள் RM425.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு, தங்கள் RM100 ரிங்கிட் உதவி தொகையைப் பயன்படுத்தியுள்ளனர்.
நிதி அமைச்சின்படி, இந்த RM100 ரிங்கிட் உதவித் தொகை, 2025 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள, 7,300-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில், இதைப் பயன்படுத்தலாம்.




















