டிரம்ப் பேச்சை மீறி காசா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு – 16 பேர் பலி

டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.

ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் பட்டினி இறப்பு எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது. பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர். ஆகஸ்ட் மாதம் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இன்றைய தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here