ஜோகூர்:
தேசிய கால்பந்து அணியின் ஏழு வீரர்கள் மீது FIFA விதித்துள்ள தடை குறித்து, மலேசியக் கால்பந்து சங்கம் (FAM) அரசியல் தாக்கத்தின்தலையீட்டின் கீழ் செயல்படுகிறது என ஜோகூர் இளவரசரும் JDT (Johor Darul Ta’zim) கால்பந்து அணியின் உரிமையாளருமான துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் (TMJ) கடுமையாக குற்றம்சாட்டினார்.
“FIFA விதித்த தடை மலேசியாவுக்கான பெரும் அவமானம். இது ஒரு தனிநபரின் தவறாகவோ அல்லது ஒரு குழுவின் அலட்சியமாகவோ பார்க்கப்படக்கூடாது. மாறாக, இது FAM-ஐ சூழ்ந்திருக்கும் அரசியல் கலாசாரத்தின் விளைவு,”என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் “தேசிய அணியான ஹரிமாவ் மலாயா (Harimau Malaya) மக்களின் பெருமையும் தேசிய மரியாதையின் அடையாளமும் ஆகும். அப்படியான ஒரு அணியை நிர்வகிப்பதில் ஏற்பட்ட மெத்தனமும் அரசியல் தலையீடும் தான் இன்று நாட்டை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது,”என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தடையின் தாக்கம் தேசிய அணியின் மனநிலையையும் எதிர்காலப் போட்டிகளில் பங்கேற்பதையும் பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
“இந்தச் சூழ்நிலைக்கு யார் பொறுப்பு, யார் பின்னணியில் உள்ளனர் என்பதைப் பற்றி வெளிப்படையான விசாரணை தேவை. FAM அமைப்பில் உள்ள ஊழல் மற்றும் அரசியல் தலையீடு நீங்காமல் இருந்தால், மலேசிய கால்பந்தின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்படும்.”
இதேவேளை, FIFA விதித்த தடையால் மலேசிய கால்பந்து அணி அனைத்துலக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று TMJ கூறினார்.



















