கார்த்திகை மாதம் வீட்டில் விளக்கேற்றும் போது…

கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமியை கார்த்திகை தீபத் திருவிழா நாளாக கொண்டாடுகிறோம். பலருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் அன்று மட்டுமே வீடு முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வழிபடும் வழக்கம் இருக்கும். ஆனால் சிலர் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டில் விளக்கேற்றி வைத்து, வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். வீடு முழுவதும் விளக்கேற்ற முடியா விட்டாலும் தினமும் காலையிலும் மாலை வேளையிலும் நிலைவாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இந்த அகல் விளக்குகளை வெறும் தரையில் மறந்தும் கூட வைத்து விடாதீர்கள். சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து தான் விளக்கு ஏற்ற வேண்டும். குறிப்பாக காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வீட்டு வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வைப்பது மிகவும் விசேஷமானதாகும்.

அதே போல் மாலையில் 6 மணிக்கு முன்பாக வீட்டின் நிலைவாசலுக்கு வெளியில் விளக்கு ஏற்றுவது சிறந்த பலனை தரும். அதன் பின்பு பூஜை அறையில் இருக்கக் கூடிய சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்து விட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் இந்த விளக்குகளை முடிந்த வரை தானாக குளிரும் வரை எரிய விட வேண்டும். குறைந்தது அரை மணி நேரமாவது இந்த விளக்குகள் எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். முழுவதுமாக குளிர விடும் வரை நேரம் இல்லை என்றால், அரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டின் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று வைத்து விட வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் விளக்குகளை குளிர வைக்கும் போது வாயால் அல்லது கைகளால் ஊதி அணைக்கக் கூடாது. திருக்கார்த்திகை தீபம் அன்று நிறைய விளக்குகள் மாலையில் ஏற்றினாலும் கூட, காலையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளை ஏற்ற தவறக் கூடாது. கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது வீட்டில் சண்டை சச்சரவுகள் செய்யக் கூடாது. அபசகுனமான சொற்களை வீட்டில் தவறிக் கூட யாரும் உச்சரிக்கக் கூடாது. எப்போதும் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி இருப்பதற்கான சூழ்நிலை இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் தெய்வீக அருளை எப்போதும் நிலைத்திருக்க செய்யும். மகாலட்சுமியின் அருட்கடாட்சம் நிறைந்திருக்கும். அப்படி கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் வீட்டில் விளக்குகளை ஏற்றும் பொழுது நம்முடைய வீட்டினுள் சிவபெருமானின் அருள் நிறையும். குலதெய்வம் நம் வீட்டிற்கு வரும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here