கோலாலம்பூர்:
மலேசியாவில் 2020 முதல் 2024 அக்டோபர் வரை பதிவான உயிர்மாய்ப்பு சம்பவங்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஆடவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 5,857 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன. இதில் 1,813 பேர் 15 முதல் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் என்பது கவலைக்கிடமான தகவலாகும். அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளைய நடுத்தர வயதினரே என தெரிய வந்துள்ளது.
வியாழக்கிழமை (நவம்பர் 27) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தகவல்களை வெளியிட்ட இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹேன்னா யோ, உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பல அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படாமல் இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தார். இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ பதிவுகளைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயிரை மாய்த்துக்கொள்வது பற்றிய செய்திகள் ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும்போது, அதேபோன்ற எண்ணங்களை மற்றவர்களிடமும் தூண்டக்கூடும் என்று எச்சரித்தார். “இந்த விஷயம் மிகுந்த பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. தவறான தகவல்களும் உணர்ச்சிவசப்படுத்தும் செய்திகளும் ஆபத்து ஏற்படுத்தலாம்,” என்று அவர் கூறினார்.
உதவி தேவைப்படும் பல இளைஞர்கள் தங்கள் பிரச்சினைகள் வெளியில் தெரியக்கூடாது என்ற பயத்தில் ஆதரவை நாட தயங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். “பள்ளிகளில் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தரவுகள் காட்டுவது — பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் வேலை செய்யும் இளைஞர்கள். எனவே, பணியிடங்களிலேயே மனநல விழிப்புணர்வும் பயிற்சிகளும் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மாநிலங்களைப் பொருத்தவரை, அதிகமான உயிர்மாய்ப்பு சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜோகூர், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு மாநிலங்களும் இதில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















