பீகாரில் பறவைக் காய்ச்சல் பீதி: 150-க்கும் மேற்பட்ட காகங்கள் பலி – தீவிர கண்காணிப்பில் வனத்துறை!

பாகல்பூர் (பீகார்):

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்துள்ளன. இது பொதுமக்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, பாகல்பூரின் நவ்காச்சியா பகுதியில் ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் காகங்கள் ஏவியன் இன்ப்ளூயன்ஸா வைரஸ் (பறவைக் காய்ச்சல்) காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்த காகங்களின் மொத்த எண்ணிக்கை 150-ஐத் தாண்டியுள்ளது.

காகங்கள் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றியுள்ள 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குத் தீவிரமாகக் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் கோழிகளுக்குப் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பீகார் மட்டுமின்றி, ஜனவரி முதல் வாரத்தில் மத்தியப் பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களிலும் பல நூறு காகங்கள் இதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தன. இது அண்டை மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பறவைகள் உயிரிழப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இறந்த பறவைகளைக் கண்டால் கைகளால் தொடாமல் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here