இதுகுறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் வியன்னாவில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவும் பங்கேற்றது.
இதன்மூலம், இந்த விவகாரம் தொடா்பாக ஈரானுடன் அமெரிக்கா மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது.
இந்தப் பேச்சுவாா்த்தை, அடுத்த வாரமும் வியன்னாவில் தொடரும். அடுத்த வார மத்தியில் அந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஈரான் அணுசக்தி திட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் புதுப்பிதற்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.
அந்த நீண்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே வியன்னாவில் ஈரானுடன் அமெரிக்கா மறைமுகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொமனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் சம்மதித்தது.
அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை நீக்குவதாக வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்துக்கு, அப்போதைய துணை அதிபராக இருந்த ஜோ பைடன் முழு ஆதரவு தெரிவித்திருந்தாா்.
எனினும், ஒபாமாவுக்கு அடுத்தபடியாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தாா். அத்துடன், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.
அதற்கு பதிலடியாக, ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை ஈரான் படிப்படியாக மீறியது. இதனால், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வந்தது.
எனினும், அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.
இந்தச் சூழலில், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக, அதில் கையெழுத்திட்ட அமெரிக்கா அல்லாத பிற நாடுகளும் ஈரானும் பங்கேற்கும் மாநாடு ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சாா்பில் ஈரான் விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ராபா்ட் மால்லி பங்கேற்றாா்.
இந்த நிலையில், அந்த மாநாடு வியன்னாவில் மீண்டும் அடுத்த வாரம் நடைபெறும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.




















