சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின

கோத்தா பாரு: ஜாலான் கெபுன் சுல்தான் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சீனப் புத்தாண்டுக்காக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 76.8 டன் மாண்டரின் ஆரஞ்சுகள் எரிந்து நாசமாகின. கிடங்கிற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவந்ததாக கிடங்கு மேலாளர் ஹாங் லெங் ஃபெங் கூறினார்.

இந்த மாண்டரின் ஆரஞ்சுகள் அனைத்தும் கிளந்தான் முழுவதற்குமான பொருட்கள், கோத்தா பாருவில் உள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் இந்தக் கிடங்கிலிருந்து தங்கள் இருப்பைப் பெறுகின்றன என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அவரது கூற்றுப்படி, கிடங்கு சுமார் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது, ஆனால் தீ விபத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான மாண்டரின் ஆரஞ்சு விநியோகத்தை இது பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து  பொருட்களும் அழிந்து விட்டது என்று அவர் கூறினார்.

கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஃபத்லிசில் இக்ராம் அஹ்மத் பவுசி கூறுகையில், தனது துறைக்கு இரவு 9.09 மணிக்கு NG999 அமைப்பு மூலம் அவசர அழைப்பு வந்ததாகவும், பல குழுக்களை அந்த இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

சேமிப்பு ரேக்குகள் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து கிடங்கிற்குள் நுழைவதில் சிரமங்கள் ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் ஸ்கைலிஃப்டைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஃபத்லிசில் கூறினார். இரண்டு லோரிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் அழிக்கப்பட்டதாகவும், கிடங்கு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here