சிறையில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டாரா ஜெஃப்ரி எப்ஸ்டீன்?.. பிரேத பரிசோதனை அறிக்கையில் புது தகவல்

சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.

கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்த நேரத்தில் நியூயார்க் நகர முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக அறிவித்தது.

ஆனால் அது தற்கொலையா என்பது குறித்த கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.

எப்ஸ்டீன் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். அவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே எப்ஸ்டீன் உண்மையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வழக்கில் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அவற்றை மறைக்க கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் மீண்டும் பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில் பிரேத பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன் ‘தி டெலிகிராப்’ இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், எப்ஸ்டீனின் மரணம் தூக்கு போட்டதால் நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை, அவர் யாரோ ஒருவரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன என்று கூறிய அவர், தனது 50 ஆண்டுகால மருத்துவப் பணியில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட எவருடைய கழுத்திலும் இதுபோன்று மூன்று முறிவுகளைத் தான் பார்த்ததே இல்லை என்று பேடன் கூறியுள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பிரேதப் பரிசோதனையை நேரில் பார்க்காமலேயே இது தற்கொலை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகப் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் இருந்த சிறையில் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை உறுதிப்படுத்தியது. அவரது அறையில் வழக்கமான சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும் இந்த அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here