புக்கிட் பிந்தாங் மத போதனை கூடாரம் அகற்றம்: முஸ்லிம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த DBKL முடிவு!

கோலாலம்பூர், பிப்ரவரி 18, 2026:

புக்கிட் பிந்தாங் சாலையில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில் தற்காலிகக் கூடாரம் அமைத்து மத போதனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு அமைப்பின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க DBKL முன்வந்துள்ளது.

நேற்று புக்கிட் பிந்தாங், யாயாசான் சிலாங்கூர் கட்டடத்திற்கு முன்னால் MRM அமைப்பு அமைத்திருந்த போதனைக் கூடாரத்தை DBKL அதிகாரிகள் அகற்றினர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற நடமாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பாதசாரிகள் பாதையில் (Pedestrian Walkway) இந்த கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் என்று DBKL கூறியுள்ளது.

பொது இடத்தில் அனுமதி இன்றி கூடாரம் அமைத்தது சட்டப்படி குற்றமாகும்.

அதிகாரிகள் அங்கு சென்றபோது, விளக்கம் அளிக்க அந்த அமைப்பின் பிரதிநிதிகள் யாரும் இல்லை. சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்த பின்னரே, கூடாரம் அகற்றப்பட்டு பொருட்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

பொது இடங்களில் மத போதனைகளை (Dakwah) நடத்த DBKL தடை விதிக்கவில்லை. ஆனால், அதற்கு உள்ளூர் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், MRM அமைப்பு தனது முகநூல் பக்கத்தில், கடந்த 14 ஆண்டுகளாக அதே இடத்தில் இந்தச் சேவையைச் செய்து வருவதாகவும், இதுவரை காவல்துறை அல்லது மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவித்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தாங்கள் வியாபாரம் செய்யாததால் எவ்வித உரிமமும் தேவையில்லை என்று முன்பு கூறப்பட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்திற்கு நீண்டகாலத் தீர்வு காணும் வகையில், MRM அமைப்பின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த DBKL நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here